Feminist Dialectics and Pluralistic Dialogues
Keywords:
Feminism, Feminine Voices, Tamil Women Poets, Ideology, Sangam Literature, EducationSynopsis
பெண்ணியம் என்பது பெண்கள் சம உரிமைபெறவும், சம வாய்ப்பைப் பெறவும், சம கடமையாற்றவும் இயக்கமாக நெறிப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் ஆகும். உளவியல் பூர்வமாகவும், மார்க்சிய தத்துவ அடிப்படையிலும், பின்நவீனத்துவ பார்வையிலும், கட்டவிழ்ப்பு கொள்கையோடு பெண்களின் உரிமைகளை, பொறுப்புகளை திறனாய்வு செய்யக்கூடிய ஒரு கோட்பாடு பெண்ணியமாக வளர்ந்திருக்கின்றது. இதில் பாலியல், பாலியல் சார்ந்த சாதி, மத, இன ஆதிக்க அணுகுமுறைகளைக் களைந்து ஆண்களின் மேலாண்மை உளவியல் கட்டமைப்பைக் கட்டுடைத்து ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கான புரிதலை சமூகத்தில் உறுதிப்படுத்தக் கூடிய ஒரு இயக்கம், சிந்தனை ஆகும். பல்வேறுபட்ட வாய்ப்புகள், தொழில்சார்ந்த பங்கேற்பு, கல்வியில் சம அந்தஸ்து பெறுதல், வேலைவாய்ப்பில் சமமான கூலி பெறுதல், குடும்பத்தில் மன அழுத்தங்கள் இன்றி இயல்பான மனுஷியாக நடத்தப்படுவதற்கு உரிய அங்கீகாரத்தைக் கோருதல் என்பதாக நாம் இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படையில் இலக்கியம் என்பது சமூகத்தினுடைய மதிப்பீடுகளின் பிரதிபலிப்பு. இந்தப் பிரதிபலிப்பு ஒரு சார்பானதாக இருக்கும்போது அதனை விசாரணைக்கு உட்படுத்துவதும், சமூக சிந்தனையோடு அணுகுவதற்கும் உரிய நிகழ்வுகளின் அல்லது வரலாறுகளின் அல்லது மனிதச் செயல்பாடுகளின் மூலமாக பதிவாகும் இலக்கியங்களை பெண்ணினுடைய பார்வையிலிருந்து பெண்ணினுடைய மொழி வாயிலாக அறிந்து கொள்வதிலிருந்து, ஆண்களுக்கு பெண்ணின் மன உணர்வுகளை சரியாக புரிந்துகொள்ள செய்வதிலிருந்து நாம் ஒரு மாற்று இலக்கியத்தை மடைமாற்றம் செய்து புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதன் காரணமாக இதுவரை எழுதப்பட்ட பெண் நலம் புனைந்துரைத்தல் வழியாக எழுதப்பட்ட ஆண்களினுடைய இலக்கியத்தை பெண்ணியத் திறனாய்வுக்குள் பார்க்கும் பொழுது முற்றிலும் அது தந்தைமைச் சமூக ஆண் மன உணர்வுகளின் அடையாளமாகவே இருந்து வருகிறது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இப்படி ஆண் மேலாதிக்க சிந்தனைகளை விசாரணைக்கு உட்படுத்தி, பெண் தனக்கான அனுபவங்களை தன்னிலை சார்ந்து விவாதிக்க கூடிய ஒரு மாற்றத்தை பெண்ணிய எழுத்துக்கள் உருவாக்கித் தந்திருக்கின்றன. பெண் எழுத்து பெண்ணை எழுதுதல், பெண்மையை எழுதுதல், பெண் தன் நிலையை எழுதுதல் என்பதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை இளந்தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான ஒரு முயற்சியாக பெண்ணியம் சார்ந்த கருத்தரங்கங்கள் ஏராளமாக இந்தியச் சூழலிலும் பன்னாட்டுச் சூழலிலும் நடைபெற்றுவருகின்றன. கொரானா கோவிட்19 நெருக்கடி கால சூழலில் இணைய வழியாக நடந்து கொண்டிருக்கக் கூடிய பல பெண்ணிய கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் ஒரு புதிய பரிணாமத்தை காட்டி இருக்கின்றது என்றாலும் பெண்மை இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பதற்கான வரையறை இன்னும் ஆய்வாளர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை. பெண்ணிய இலக்கியங்கள் ஆண்களின் பார்வையில் உதாரணமாக தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றவர்கள் பாலியல் சார்ந்த பெண் விடுதலை உணர்வை இலக்கியங்களில் படைத்திருக்கிறார்கள் என்றாலும் பெண்ணியத் திறனாய்வு கண்கொண்டு ஆய்வு செய்யும்போது ஜெயகாந்தன் போன்றவர்கள் பெண் விடுதலைக்கு எதிரானவர்களாகவே மதிப்பிடப்படுகிறார்கள். பாரதியோ, பாரதிதாசனோ பெண்ணுரிமை பேசி இருக்கிறார்கள் என்றாலும் பெண்ணின விடுதலையை பேசவில்லை என்பதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இவ்விடத்தில் இதுவரையில் பெண்ணியம் சார்ந்து வெளிவருகின்ற ஆய்வுக்கட்டுரைகளை பார்க்கும்போது அவை பெண்மை சார்ந்த ஆய்வாகவே இருக்கின்றன. இதனை மாற்றி பெண்ணியம் என்பது சாதி, மத, இன வேறுபாடுகளிலிருந்து விடுவித்து அகவிடுதலை வேட்கைகளை, அகம் சார்ந்த அந்தரங்க அரசியலை பெண்ணிய அரசியலாக முன்வைக்க வேண்டிய தேவையை ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். பெண்ணிய அரசியல் என்பது பெண்மை குணங்களையும், பெண் தன்னிலை அதிகாரத்தையும் சமமாகப் பார்த்து தனக்கான நுண்ணரசியலை, தேர்வு உரிமையை, சமூகப் பொறுப்புணர்வை மதிப்பீடுகளாகத் தரக்கூடிய இலக்கிய புனைவுகளை பெண் எழுத்துக்கள் புதுப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பிரென்சுப் பெண்ணிய தத்துவவியலாளர்கள் ஹெலன் சீக்சு, ஜூலியா கிறிஸ்தவா போன்றவர்களின் பெண்மொழி ஆய்வுகள் பெண்ணரசியலைப் புரிந்துகொள்ள உதவும். இந்த சிந்தனைகளின் அடிப்படையில் “பெண்ணிய இயங்கியல் – பன்மைத்துவ உரையாடல்கள்” எனும் பொருண்மையிலமைந்த இந்நூல் தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகளை பார்க்கும் பொழுது பெண்ணிய அழகியல் சார்ந்த மதிப்பீடுகள் இன்னும் ஆழமாகச் செய்யப்பட வேண்டும் என்பதை கட்டுரையாளர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. கட்டுரைகளை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைப் பதிவு செய்து கொள்கின்றேன்.
Chapters
-
Modern Tamil Women Poetry and Feminine Voices
-
Genocide of female infanticide
-
Feminism - Ideology
-
Moivirunthu Culture and Male Dialectics
-
Female Gender in Sangam Literature
-
Samoogaviyal Paarvaiyil Penniyam
-
Feminist Criticism – Perspectives and Tendencies
-
Education and functioning of Sangam period women
-
Female gender crushed by casteism
-
Femininity in Siddhar Songs
-
Yesukaviyathil penkal